பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி!
2023 பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர், வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்திய பெண்கள் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி, 15 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
பிரதமர் மோடிக்குப் பரிசளிக்கப்பட்ட மெஸ்ஸியின் ஜெர்சி!
நேற்று பெங்களூரில் 2023-ம் ஆண்டிற்கான இந்திய எரிசக்தி வார விழாவை, பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த YPF எரிசக்தி நிறுவனத்தின் தலைவரான பாப்லோ கோன்சலஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சியைப் பரிசாக வழங்கினார். கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய செல்சீ அணி வீரர்!
நேற்று, துருக்கி நாட்டில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நாட்டின் பல கட்டடங்கள் இடிந்து 1900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்சீ அணியின் முன்னாள் வீரர் மற்றும் நியூகேஸ்டில் அணியின் வீரருமான கிறிஸ்டியன் அட்ஸு, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த 31 வயதான இவர், துருக்கி கிளப் போட்டியில் விளையாடியுள்ளார்.