பட மூலாதாரம், Reuters
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
பட மூலாதாரம், Reuters
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்ததும் மோசமான வானிலையும் விபத்துக்குக் காரணம் என்றும் தீயணைப்புத் துறை ஊகிக்கிறது.
ஆனால் இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை”, என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.
80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு