ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 250 என்ற இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது, இதனை விரட்டி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை விட 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு மனநிறைவைத் தருகிறது. மைதானத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் பந்து சற்று பிடிமானம் இல்லாமல் தடுத்தது.
பில் சால்ட் மற்றும் விராட் பாய் விளையாடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது. அதன் பிறகு, டிம் டேவிட் விளையாடிய விதத்தை நான் எதிர்முனையில் நின்றுகொண்டு அவரது சிக்சர்களை ரசித்தேன்.
எனது எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. நான் களத்தில் இருக்கும் வரை, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பேன். அதே நேரத்தில், டிம் டேவிட் அங்கு இருந்தது என் அதிர்ஷ்டம்.
அவர் ஒரு மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் என்று நான் கூறுவேன். அவர் கடந்த ஆண்டும் இதைச் செய்துள்ளார். ஒரு பினிஷராக அவர் மிகவும், சிறப்பாக விளையாடுகிறார், நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, டஃபி அந்த அவுட் ஸ்விங்கர்களை வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்த விதம், எங்களை ஆட்டத்தில் முன்னிலைப்படுத்தியது. அதன் பிறகு, குருணால் பாண்டியா பந்து வீசி சர்ப்ராஸ் விக்கெட்டை வீழ்த்தியது ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்.

இறுதி ஓவர்களில், புவி மற்றும் அபினந்தன் யார்க்கர்களை வீசிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இடையில் ரொமாரியோ வந்து ஒரு ஓவரை வீசிய விதம், எங்கள் வீரர்களின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சியைக் காட்டுகிறது.
எங்கள் அணியில் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுயாஷ் வந்து அந்த நான்கு ஓவர்களையும் மிக அழகாக வீசியது சிறப்பாக இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, நான் அழுத்தத்தில் இருக்கும்போதெல்லாம் குருணால் பாண்டியாயைத் தான் தேடுவேன்.
அவர் எங்கே என்று பார்ப்பேன். அவர் மீது எனக்கு அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது. வரும் போட்டிகளைப் பொறுத்தவரை, அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்திற்காக அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறோம்”என்று பேசியிருக்கிறார்.