ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஜூன் 4-ம் தேதி பெங்களுருவில் ஆர்.சி.பி-யின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருபக்கம் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், கிரிக்கெட் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட, மறுபக்கம் உயிரிழந்தோர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தலா ரூ. 25 லட்சமாக உயர்த்தினார் முதல்வர் சித்தராமையா.
மேலும், ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சில நிர்வாகிகளைக் கைதுசெய்ய, இன்னொருபக்கம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தனர்.
இவ்வாறான சூழலில், கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் சம்பந்தப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.