தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் மறைந்த ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நரிமன் பாயின்ட்டில் உள்ள என்.சி.பி.ஏ வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஸ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் தனது கட்சி தலைவர்களுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்று இருப்பதால் அவர் சார்பாக அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தினர். பியூஸ் கோயல் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ரத்தன் டாடாவுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, கண்ணீர் சிந்தினார்.
தங்களது வீட்டிற்கு ரத்தன் டாடா வந்த போது வெறும் இட்லி சாம்பார் மட்டும் பரிமாறியதாகவும், அதனை முகம் கோணாமல் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டார். ரத்தன் டாடாவின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட இருந்ததாலும், தொடர்ந்து தலைவர்கள் வந்ததாலும் தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மெரைன் டிரைவ் கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மகாராஷ்டிரா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ரத்தன் டாடாவிற்கு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. அமைச்சரவை கூட்டத்தில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.