வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செஸ் ஒலிம்பியாடில் வென்ற வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டு 40 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்று உரையாற்றிவிட்டு கூடியிருந்த மாணவர்கள் பலருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு களைத்து போயிருந்த பிரக்ஞானந்தாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
“சரி, நீங்கள் சொன்னபடியே 19 வயதுதான். இவ்வளவு சிறிய வயதில் வானளாவிய புகழை எட்டியிருக்கிறீர்கள். எல்லாரும் உங்களைப் பற்றியே பேசுகிறார்கள். இந்த புகழுரைகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?”
“எல்லாரும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். என்னை புகழ்கிறார்கள் என்பதிலெல்லாம் அதிக கவனம் செலுத்தமாட்டேன். என்னைப் பற்றி செய்தித்தாள்களிலும் டிவியிலும் வரும் எந்த செய்தியையும் பார்க்கமாட்டேன். நான் கொடுக்கும் பேட்டிகளை பார்க்கவும் எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும். என்னுடைய கவனம் அதில் இருக்காது. யாராவது என்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென கேட்டால் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன். மற்றபடி புகழ் வேண்டும் என்பதற்காக நான் செஸ் ஆடுவதில்லை. அதனால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை.’
– எனக் கூறும் பிரக்கை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. முன்பும் அவரை பல முறை சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். அளந்துதான் பேசுவார். இப்போது வழக்கத்தை விட அதிகமாகவே பேசுகிறார். ஆனால், ஒவ்வொரு வார்த்தையிலும் பக்குவம் மிளிர்கிறது. மேற்கொண்டும் கேள்விகளை அடுக்கினேன்.