துளசிக்கு இறுதிப்போட்டி சீன வீராங்கனை யாங்குக்கு எதிராக. அதேமாதிரி, மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கப் போட்டி டென்மார்க் வீராங்கனை கேத்ரினுக்கு எதிராக. மனிஷா ராமதாஸ் இந்தப் போட்டியை இலகுவாக வென்றுவிட்டார். 21-12, 21-8 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
இறுதிப்போட்டியில் துளசிமதிக்கு எதிராக மோதிய சீன வீராங்கனை யாங்க் டோக்கியோவில் தங்கம் வென்றவர். தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க அவர் முனைப்போடு இருப்பார் என்பதால், துளசிமதிக்கு சவால் காத்திருக்கிறது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், இதே யாங்க்கை வீழ்த்திதான் 2022-ல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் துளசிமதி தங்கம் வென்றிருந்தார். ஆக, துளசிமதி மீதும் நம்பிக்கை இருந்தது.
இறுதிப்போட்டியின் முதல் செட்டில் துளசிமதி சவாலும் அளித்தார். 21-17 என குறுகிய புள்ளி இடைவெளியில்தான் யாங்க் அந்த முதல் செட்டை வென்றிருந்தார். ஆனால், முதல் செட்டை இழந்த அயர்ச்சியிலிருந்து துளசியால் மீள முடியவில்லை. இரண்டாவது செட்டின் தொடக்கத்திலேயே யாங்க் அட்டாக்கிங் மோடில் பாயின்ட்டுகளை அள்ளினார். ஒருகட்டத்தில் 11-5 என துளசிமதி கடும் பின்னடைவைச் சந்தித்தார். அதிலிருந்து அவரால் மீண்டே வர முடியவில்லை. 21-10 என துளசிமதி இரண்டாவது ஆட்டத்தையும் இழந்தார். வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது
தங்கம் கிடைக்காவிடிலும் சில நிமிட இடைவெளியில் தமிழக வீராங்கனைகள் அடுத்தடுத்து வென்ற இந்த இரண்டு பதக்கங்களுமே தங்கத்துக்கு இணையான சந்தோஷத்தைத்தான் கொடுத்திருக்கிறது.