Kapil Dev on Virat Kohi’s absence from WI tour – News18 Tamil

Share

அஸ்வினை ட்ராப் செய்யும் போது விராட் கோலியை ஏன் ட்ராப் செய்யக் கூடாது என்று கேட்ட உலகக்கோப்பை வெற்றி முன்னாள் கேப்டன் கபில் தேவ் இப்போது கோலி போன்ற பெரிய வீரரை நீக்கிவிட்டோம் என்று சொல்ல மாட்டார்கள், மரியாதை கருதி ரெஸ்ட் கொடுத்துள்ளோம் என்றுதான் கூறுவார்கள் அது பிரச்சனையில்லை, அவர் எப்போது பார்முக்கு வருவார் என்பதுதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் அணியில் விராட் கோலி, இல்லை, ஏன் என்று கேட்டால் ரெஸ்ட் என்றனர், இதைத்தான் கபில் தேவ் சொல்லி இருக்கிறார். பொதுவாக எந்தக் காலக்கட்டத்திலும் பார்மில் இல்லாத வீரர்களுக்கு முட்டுக்கொடுப்பது கேப்டன்களின் வழக்கம், கோலி கேப்டனாக இருந்த போது ரோஹித் சர்மாவுக்கு முட்டுக் கொடுத்தார். ஆனால் கபில்தேவ் கேப்டனாக இருக்கும் போது முட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை, 1983 உலகக்கோப்பை முடிந்து மே.இ.தீவுகள் இங்கு வந்து வெறித்தனமாக ஆடி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் வென்றனர், அப்போது ‘இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடவில்லை பணத்துக்காக ஆடுகிறார்கள்’ என்று கவாஸ்கர் உள்ளிட்டோரை நேரடியாகத் தாக்கிப் பேசினார் கபில்தேவ்.

கபில்தேவின் நேர்மையை சந்தேகிக்க முடியாது, அதே போல் அவர் மனதில் பட்டதை தைரியமாக உண்மையைக் கூறுபவர், இப்போது கோலி பற்றி இவர் கூறியதற்கு ரோஹித் சர்மா கூறும்போது, ‘கபில்தேவ் வெளியிலிருந்து பார்க்கிறார், நாங்கள் உள்ளிருந்து பார்க்கிறோம்’ என்று உளறினார், எங்கிருந்து பார்த்தால் என்ன, களத்தில் பேட்டிங்கில் விராட் கோலி செம தடவு, செம சொதப்பு சொதப்பி வருகிறார் என்பது பட்டவர்த்தனம்தானே.

இதைத்தான் கபில் தேவ் மீண்டும் மீண்டும் கூறுகிறார், “விராட் கோலி போன்ற பெரிய வீரரை யாரும் நீக்கிவிட்டோம் என்று கூற மாட்டார்கள், ஓய்வு கொடுத்தோம் என்றுதான் கூறுவார்கள், இது வழக்கம்தான் மரியாதை நிமித்தமாக இப்படிச் சொல்லப்படுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது அது நீக்கம் தான். இதில் தவறில்லை.

கடந்த 5-6 ஆண்டுகளாக விராட் கோலி இல்லாமல் இந்தியா ஆடியதில்லை என்பதில்லையே, ஆடியிருக்கிறோம். ஆனால் அவர் ஃபார்முக்கு வரவேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஓகே, அவர் ட்ராப்போ, ரெஸ்ட்டோ, அவரிடம் இன்னும் கிரிக்கெட் மீதமிருக்கிறது. அதற்கான பாதையை அவர்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ரஞ்சி டிராபி ஆடலாம் எங்கு வேண்டுமானாலும் ஆடி பார்மை மீட்கலாம், இதுதான் கிரேட் பிளேயருக்கும் நல்ல பிளேயருக்கும் உள்ள வித்தியாசம், ஒரு கிரேட் பிளேயர் பார்முக்கு வர இத்தனை போட்டிகள் எடுத்துக் கொள்ள மாட்டார்.

அவர் தன்னுடனேயே போராடி அனைத்தையும் ஒழுங்கு செய்ய வேண்டும். அவர் நீண்ட காலம் பார்முக்கு வர எடுத்துக் கொள்வது கவலையளிக்கக் கூடியதே, ஒரு கிரேட் பிளேயர் இத்தனை நாட்கள் அவுட் ஆஃப் பார்மில் இருக்க கூடாது. என்றார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com