அணியிலிருந்து டிராப் செய்யப்படுவதன் வலி என்னவென்பது அவருக்கு தெரியும். இந்தப் போட்டிக்கு முன்பாகவும் தன்னுடைய நிலையை நினைத்து ஒவ்வொரு இரவிலும் அழுதுகொண்டிருந்ததாகவும் ஜெமிமா கூறியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு இறுக்கமான மனநிலையில்தான் அவர் இருந்தார்.
இந்நிலையில்தான் திடீரென நம்பர் 4/5 இல் ஆடிக்கொண்டிருந்தவரை நம்பர் 3 இல் போய் இறங்கு எனக் கூறுகிறார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இந்தத் தகவல் ஜெமிமாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
வாய்ப்புகள் அப்படித்தான் கடைசி நிமிடங்களில் கூட கதவை தட்டும்.
ஜெமிமா அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 48 ஓவர்களுக்கு களத்தில் நின்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகிறோம் என்ற பதட்டத்தை பக்குவமாக கையாண்டு கால்குலேட்டிவாக இன்னிங்ஸை முன்னெடுத்து சென்றார்.
ஜெமிமா சுரேஷ் ரெய்னாவை போன்றவர். அணியின் அத்தனை பேரின் வெற்றியிலும் மகிழ்ச்சி கொள்ளக் கூடியவர். டான்ஸ் ஆடுவார், பாட்டு பாடுவார், கலாட்டா செய்வார். அவர் இருக்கும் இடமே ஜாலியாக இருக்கும். அணியின் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கியமான ஆதாரமாக விளங்குபவர். ஆனால், அவர் மீது இங்கே மதரீதியான தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.