2018 IPL தொடரில் ஜெகதீசனுக்கு சீனியர் வீரர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததேயொழிய தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை நிர்வாகமும் சற்று கடினமான வார்த்தைகளுடன் “நாங்கள் கோப்பை வெல்லத்தான் விளையாடுகிறோமே தவிர இளம் வீரர்களை வளர்ப்பதற்கு அல்ல” என்று கூறியது. 2020ல் சென்னை அணி தடுமாறிய போது இளம் வீரர்களுக்குத் தேவையான உத்வேகம் (ஸ்பார்க்) இல்லை என்று தோனி விமர்சித்தார். அதன் பின்பு கிடைத்த வாய்ப்பிலும் ஜெகதீசனால் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.
இப்படிப் போகிற இடங்களில் எல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதும் ஜெகதீசனுக்கு வாடிக்கையாகிவிட்டது. என்னதான் சென்னை அணி தனக்குப் பெரிய வாய்ப்புகளை தராவிட்டாலும், மைக் ஹசி போன்றோருடன் பயணித்த அனுபவம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது என்று ஜெகதீசன் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மூலையில் முடங்கிவிடாமல் கிடைப்பதில் தனக்குத் தேவையானது எதுவோ அவற்றைத் தவறாமல் தேடியெடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்வதில் வல்லவர் இவர். சென்னை அணியுடன் இருந்தபோது முடிந்தவரை தோனியின் அறைக் கதவைத் தட்டி அவரின் அனுபவங்கள் மூலம் தனது கிரிக்கெட்டை வளர்த்துக் கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டியுள்ளார் ஜெகதீசன்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் Mankad முறையில் ஆட்டமிழந்த ஜெகதீசன் தன்னுடைய அதிருப்தியை சற்று மோசமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் திரும்பினார். அப்போது சமூக வலைதளங்களில் அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அத்தனை ஆண்டுகள் ஜெகதீசன் அடித்த ரன்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும், அவரின் தொடர் புறக்கணிப்புகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாகவும் இந்தச் செயல் அப்போது பலரால் பகிரப்பட்டது. அதுவும் தொடரின் முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது அவருக்கு மனரீதியாக நிச்சயம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அவரின் பேட்டிங் செயல்பாடுகளும் சிறப்பாக இல்லாததால் மீண்டும் ஒருமுறை ஜெகதீசனின் முன்பு மூடப்பட்ட கதவுகள்தான் நின்றன.
எத்தனை முறை தனது உழைப்பு வீணானாலும் மீண்டும் மீண்டும் தேனைச் சேகரிக்கும் தேனீ போல இம்முறையும் விஜய் ஹசாரே தொடரில் இரண்டாவது போட்டியில் சதம் கடந்தார் ஜெகதீசன். தற்போது அது வரிசையாக 5 சதங்களாக மாறியுள்ளது.