இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த நிலையில் போர் குறித்து எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காத அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இஸ்ரேல் தாக்குதல் நடத்த உங்களது பிராந்தியங்களையோ அல்லது வான் வழியையோ பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று சௌதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஜோர்தான் ஆகிய நாடுகளை எச்சரித்துள்ளது ஈரான்.
அமெரிக்க ராணுவப்படைகளை, தங்கள் நிலப்பரப்பில் இருக்க அனுமதித்துள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ரகசிய ராஜதந்திர தொடர்புகள் வழியாக இந்த எச்சரிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது “வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி தளம்.

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஈரான். இதற்கு நிச்சயம் பதிலடி வழங்குவோம் எனக் கொதித்துள்ளனர் இஸ்ரேல் தலைவர்கள்.
ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி அல்லது எண்ணெய் வளங்களைச் சிதைக்கத் திட்டமிடுகிறது இஸ்ரேல். ஆனால் ஈரானின் இராணுவ கட்டமைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறது என்கின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.