பஞ்சாப்பின் வரலாற்று வெற்றி:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணி 200 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்தது. சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக இதுவரை எந்த அணியும் 193 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை. அதிகபட்சமாக 2012 சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 193 ரன்களை சேஸ் செய்தது. சி.எஸ்.கே அணி முதல் முறையாக சேப்பாக்கத்தில் 200+ ரன்களுக்கு மேல் எடுத்தும் தோல்வியடைந்துள்ளது.
முத்திரை பதித்த மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தோற்கடித்தது. கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்ததன் மூலம், 214 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல்-லில் சேஸிங் செய்யப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்களை சேஸ் செய்த ஒரே அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் மும்பை அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்களும் (214) இதுவே ஆகும்.
மும்பையில் இணையும் ஜோர்டன்:
இங்கிலாந்து பந்து வீச்சாளரான கிறிஸ் ஜோர்டன், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இந்த சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மந்தமாகவே உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளரான இவரை இந்தத் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கிறிஸ் ஜோர்டன் கடைசியாக 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.