சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர். தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர். ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான ஸ்பின்னர்கள் தேவையில்லை, ஜடேஜாவே போதுமென கேப்டன்கள் களமிறங்கிய போட்டிகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த ஜடேஜா புதிதாகத் தெரிந்தார். சிஎஸ்கே சறுக்க இதுவும் ஒரு காரணம்.
இவர்களைத் தாண்டி, மும்பையின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, பஞ்சாபின் ஓடியன் ஸ்மித், சிஎஸ்கேவின் கிறிஸ் ஜோர்டன் எனப் பலரின் பெயர்களும் இடம்பெறுவதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன.
ஆனால், சரிவினைத் தலைகீழாகத் திருப்பி வைத்தால் அதுவே உயரத்தை எட்ட உதவும் ஏணியாகிவிடும். இந்த சீசனின் டாப் 10 வீரர்கள்கூட, கடந்த சீசன்களில் ஃப்ளாப் 10-ல் இடம் பெற்றிருந்திருப்பார்கள்.