புனே: பஞ்சாப் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனில் ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன் காரணமாக லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மூன்றாவது ஓவரில் ரபாடா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ராகுல்.
தொடர்ந்து வந்த தீபக் ஹூடாவுடன் இணைந்து 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் டி காக். இருந்தும் 46 ரன்களில் அவர் அவுட்டானார். தொடர்ந்து 34 ரன்கள் எடுத்த நிலையில் ஹூடா ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். குறிப்பாக 98 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த லக்னோ, அடுத்த 13 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 18 பந்துகளில் இந்த அப்செட் நடந்திருந்தது. பின்னர் சமீரா 17 ரன்களும், மோஷின் கான் 13 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது லக்னோ.
பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். சந்தீப் சர்மா 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பஞ்சாப்.
அந்த அணிக்காக கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். மிகவும் நிதானமாக விளையாடினார் தவான். மறுமுனையில் மயங்க் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் பேர்ஸ்டோ களத்திற்கு வந்தார். தவான் 15 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். தொடர்ந்து பேட் செய்ய வந்த ராஜபக்சே மற்றும் லிவிங்ஸ்டன் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினர்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். பேர்ஸ்டோ 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதிவரை களத்தில் இருந்த ரிஷி தவன் 21 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது பஞ்சாப். அதன் பலனாக 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது லக்னோ. லக்னோ அணி பவுலர்களில் மோஷின் கான் (3 விக்கெட்), சமீரா (2 விக்கெட்), குர்ணால் பாண்ட்யா (2 விக்கெட்), ரவி பிஷ்னோய் (1 விக்கெட்) வீழ்த்தி இருந்தனர். ஆட்டநாயகன் விருதை குர்ணால் பாண்ட்யா வென்றார்.
புள்ளிப் பட்டியலில் 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது லக்னோ. பஞ்சாப் அணி ஏழாவது இடத்தில் உள்ளது.