அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்ப்பாட்டு வாரியம்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி உட்பட டாப் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு மட்டுமல்லாது ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் – 20 கோடி ரூபாய்
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 12.5 கோடி ரூபாய்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 7 கோடி ரூபாய்
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – 6.5 கோடி ரூபாய்
இது தவிர நடப்பு சீசனில் அதிக ரன்கள், அதிக விக்கெட்கள், சிறந்த ஸ்ட்ரைக் ரேட், சிறந்த கேட்ச், வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது வென்ற வீரர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.