2018-ம் ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் அதிரடிக்கு பெயர் போன வீரர்களை எடுக்க சென்னை மட்டும் வயதான, சர்வதேச அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களாக எடுத்தது. வாட்சன், பிராவோ, ராயுடு, ஹர்பஜன், ரெய்னா, தாகீர் என பலரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். டி20 இளம் வீரர்களுக்கானது, இப்படி ஓடக்கூட தடுமாறும் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் போக, அரசியல் காரணங்களால் சென்னைக்கு ராசியான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற வேண்டிய ஆட்டங்கள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டன. இப்படி பல விஷயங்கள் அவர்களுக்கு எதிராக அமைந்தாலும், தோனியின் கணக்கு சிறிதும் தப்பவில்லை. பெங்களூரு அணியால் கழட்டி விடப்பட்ட வாட்சன் சதம் அடித்து மிரட்டினார். மும்பையிலிருந்து வந்த ராயுடு 600 ரன்களுக்கு மேல் எடுத்து பலரை பிரமிக்க வைத்தார். ஹர்பஜன், ரெய்னா, தோனி, தாகீர், சஹார், பில்லிங்ஸ், பிராவோ என ஆளுக்கொரு போட்டியை வென்று கொடுக்க சென்னை அணி 14 போட்டிகளில் 9 போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.
சென்னையின் போட்டி அணிகளாக கருதப்படும் மும்பை, பெங்களூரு எல்லாம் playoffs சுற்றுக்குக் கூட தகுதி பெறாத நிலையில் சென்னை அணி முதல் குவாலிஃபையர் போட்டியில் வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாம் குவாலிஃபையர் போட்டியில் வென்று வில்லியம்சன் தலைமையிலான ஐதரபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேற, இரண்டு கூல் கேப்டன்களின் அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடத் தயாராகின. கூடவே மும்பை வான்கடே மைதானமும் தயாரானது.