நல்ல தொடக்கத்திற்குப் பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டாலும் மீண்டெழுந்து மறுபடியும் வெல்லத் தொடங்கியது. அரையிறுதியையும் உறுதி செய்தது.
கில்கிறிஸ்ட் ஒருபக்கம் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவாறு பொறிந்துத் தள்ளினார். ரோஹித் சர்மா பேட்டால் மட்டுமல்ல பந்தாலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தினார். 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒரு ஹாட்ரிக்கும் எடுத்திருந்தார். கிப்ஸ், சைமண்ட்ஸ், பிராவோ ஆகியோரும் கணிசமான பங்களிப்பை கொடுத்தனர். ஆர்.பி.சிங்கும் ஓஜாவும் பர்ப்பிள் கேப்பிற்கான ரேஸில் முன்னணியில் இருந்தனர்.
டெக்கான் சார்ஜர்ஸ் அளவுக்குத் தொடக்கத்திலேயே பெங்களூரு ஆதிக்கம் செலுத்தவில்லை. முதல் 5 போட்டிகளில் பெங்களூரு 4 போட்டிகளில் தோற்றிருந்தது. ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு புதிய கேப்டனாகியிருந்த பீட்டர்சன் இங்கிலாந்து ஆட செல்வதற்காக இடையிலேயே கிளம்பிவிட்டார். அணி தட்டுத்தடுமாறி நின்றது. இந்த சமயத்தில் கேப்டன்சி அனில் கும்ப்ளேவுக்குக் கொடுக்கப்பட்டது.
பெங்களூருவின் ஸ்டார் என்றால் அது அனில் கும்ப்ளேதான். தொடக்கத்திலிருந்தே கலக்கி வந்தார். முதல் போட்டியிலேயே 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். கும்ப்ளேவின் மாயாஜால பௌலிங் அந்த அணிக்கு பெரும்பலமாக இருந்தது. கூடவே டிராவிட், ராஸ் டெய்லர், காலிஸ், பயமறியா இளம் கோலி, மனீஷ் பாண்டே ஆகியோர் இணைய பெங்களூரு எதிர்பாராதவற்றை நிகழ்த்தத் தொடங்கியது. அரையிறுதிக்கும் முன்னேறியது.
அரையிறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லியை எதிர்கொண்டது. கில்கிறிஸ்ட் 35 பந்துகளில் 85 ரன்களை ஒற்றை ஆளாக அடித்து, மிக சுலபமாக டெக்கானை வெல்ல வைத்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இன்னொரு அரையிறுதியில் சென்னையை பெங்களூரு எதிர்கொண்டிருக்கும். பெங்களூருவிற்கு டார்கெட் 147 தான். டிராவிட்டும் மனீஷ் பாண்டேவும் சிறப்பாகக் கூட்டணி அமைத்து வென்று பெங்களூருவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றனர்.