India vs South Africa I chose Wicket keeping because of my father – Rishabh Pant , என் தந்தையைப் பார்த்தே விக்கெட் கீப்பிங் தேர்வு செய்தேன்

Share

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்-பேட்டரா அல்லது பேட்டர் விக்கெட் கீப்பரா என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் விக்கெட் கீப்பிங் தான் தன் உயிர் மூச்சு எனும் விதமகா அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் 2022 தொடர் ரிஷப் பண்ட்டிற்கு சரியாக அமையவில்லை. அவர் இறங்கும் டவுனில் சிக்கல் இருக்கிறது. 14 போட்டிகளில் 340 ரன்களையே எடுத்தார், இவரை ஒப்பிடும்போது விருத்திமான் சஹா பரவாயில்லை போல்தான் தெரிகிறது.

இந்நிலையில் நாளை, ஜூன் 9ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “முதலில் கொரோனா பாதுகாப்பு வளையம் இல்லாமல் இருப்பது பெரிய நிம்மதி. அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக ஆடலாம். இந்தத் தொடரில் 100% பங்களிப்பு செய்வேன், என்னை அடிக்கடி நீ விக்கெட் கீப்பர் பேட்டரா, பேட்டர் விக்கெட் கீப்பரா என்று கேட்கின்றனர்.

நான் என் தந்தையைப் பார்த்து விக்கெட் கீப்பிங்கைத் தேர்வு செய்தேன், அதனால் விக்கெட் கீப்பிங்கிற்கே என் முன்னுரிமை. நான் எப்போதுமே முதலில் விக்கெட் கீப்பர் அப்புறம்தான் பேட்டர்.

சிறந்த கீப்பராக இருக்க வேண்டுமெனில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். பந்து எப்படியிருந்தாலும் நம்மிடம்தானே வரும் என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. பந்தைப் பிடிக்கும் போது கடைசி வரை பந்தை பார்க்க வேண்டும்.

கீப்பிங் செய்வதற்கென்றே சில அடிப்படை நுணுக்கங்கள் உள்ளன. அதை பின்பற்றுவது அவசியம். உடலையும் மனத்தையும் புத்துணர்வுடன் திடகாத்திரமாக வைத்திருக்க வேண்டும்” என்றார் ரிஷப் பண்ட்.

இதற்கிடையே 42 டிகிரி வெயில் கொளுத்தினாலும் அதன் விளைவு இரவில் தெரிந்தாலும் அடாது வெயில் அடித்தாலும் விடாது மேட்ச் பார்ப்போம் என்ற இந்திய மனநிலைக்கேற்ப டெல்லியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com