மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 86 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.