இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கும், இந்திய அணி 156 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸ்லாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. நியூசிலாந்து முதன்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.