டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது.
உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ்வும் தற்போது இடம்பெற்றிருக்கிறார்.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” உலகக் கோப்பையை வென்ற இந்த உணர்வில் இருந்து முழுமையாக வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும்.

2024-ல் டி20 உலகக்கோப்பையின் வெற்றிக்கு பிறகு தான் எல்லாமே மாறியது. அங்கிருந்துதான் இந்திய அணி எதிர்காலத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒரு உணர்வாகும். கடந்த ஒரு மாதமாக நாங்கள் கடந்து வந்த பயணம் மிகச் சிறப்பானது. ஆனால், எங்களது பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
எனது அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டிற்கான தங்கப் பதக்கத்தை வெல்வதுதான்.
அதேபோல அந்த ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் தக்கவைக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், இப்போது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் எங்கள் வெற்றிப் பயணம் தொடரும்.

சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடப் போகிறோம் என்பது தெரிந்ததிலிருந்தே நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.
இந்தியாவில் விளையாடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்கு இந்த வெற்றியைப் பரிசளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.