இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை முன்னிலையாக பெற்றது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது. 358 ரன்களை அடித்து அதற்கு மேல் ஒரு டார்கெட்டை செட் செய்வது இமாலய சவால்.

நியூசிலாந்து இந்தளவுக்கு பெரிய முன்னிலையை பெற்றதற்கு ரச்சின் ரவீந்திரா அடித்த சதம்தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. ரச்சின் ரவீந்திரா இந்தியாவுக்கு எதிராக இத்தனை சிறப்பாக ஆட அவருக்கு சிஎஸ்கே அணியும் ஒரு விதத்தில் உதவி புரிந்திருக்கிறது. எப்படி தெரியுமா?
ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளில் 134 ரன்களை எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 50 ஐ சுற்றிதான் இருந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் கிட்டத்தட்ட 100 க்கு நெருக்கமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாகவும் எதிர்கொண்டார். பெரிய பெரிய ஷாட்களை ஆடியிருந்தார். ரச்சின் ரவீந்தரா ஏற்கனவே ஸ்பின்னர்களை நன்றாக ஆடக்கூடியவர்தான். ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக நன்றாக ஆடியிருக்கிறார். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையிலும் நியூசிலாந்து அணிக்காகவும் நன்றாக ஆடியிருந்தார். ஆனாலும், ஸ்பின்னர்களை இன்னும் சிறப்பாக எதிர்கொள்ள ரச்சின் பயிற்சி செய்ய விரும்பினார். அதற்கு வலுவான காரணமும் இருந்தது.
New Zealand stars Rachin Ravindra and Ben Sears train at #SuperKingsAcademy ahead of their Tests in the subcontinent against Afghanistan and Sri Lanka!#TrainLikeASuperKing pic.twitter.com/P8JsOiALSh
— Super Kings Academy (@SuperKingsAcad) September 2, 2024
செப்டம்பர் – அக்டோபர் என இரண்டு மாதங்களில் மட்டும் நொய்டாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட், இலங்கையில் அவர்களுக்கு எதிராக இரண்டு டெஸ்ட், இந்தியாவுக்கு எதிராக இங்கே மூன்று டெஸ்ட்களில் ஆட வேண்டும் என்பது நியூசிலாந்து அணியின் அட்டவணை.
தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு ஸ்பின்னுக்கு சாதகமான துணைக்கண்ட சூழலில் ஆட வேண்டியிருந்ததால் அதற்கேற்ற வகையில் பயிற்சி செய்ய வேண்டி ரச்சின் சிஎஸ்கே நிர்வாகத்தை தொடர்புகொண்டார். அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் ரச்சின் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் இங்கேயே தங்கியிருந்து சிஎஸ்கேவின் அகாடெமியில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதன்பிறகு, இலங்கையில் சென்றும் நன்றாக ஆடியிருந்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராகவும் சதமடித்திருக்கிறார். இந்தியாவில் வைத்து 12 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து வீரர் ஒருவர் அடிக்கும் சதமாகவும் இது பதிவாகியிருக்கிறது.

சென்னையில் சிஎஸ்கே அகாடெமியில் ரச்சின் பயிற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில், ‘அடுத்தடுத்து தொடர்ச்சியாக துணைக்கண்ட சூழலில் ஆடவிருக்கிறேன். அதற்காகத்தான் இந்த சூழலிலேயே தங்கியிருந்து ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்காக கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்ள இங்கே வந்திருக்கிறேன்.’ என ரச்சினே கூறியிருந்தார்.
இந்திய வீரர்கள் சிலர் கவுண்ட்டியில் போய் ஆடுவதைப் போல இப்போது லீக் சூழலில் இப்படியான கலாச்சாரமும் வளர தொடங்கியிருக்கிறது.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41