புதுடெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை சேர்த்துள்ளது.
இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் களம் புகுந்தனர். 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 10 ரன்களுக்கு அவுட். 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 15 ரன்களுக்கு போல்டு. 6வது ஓவரில் சூர்ய குமார் யாதவ் 8 ரன்களுக்கு விக்கெட் என நிலைமை அதள பாதாளத்துக்கு சென்றது. 7 ஓவர்கள் முடிவில் 51 ரன்களை சேர்த்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
அப்போது தான் மீட்பர்களாக களமிறங்கினர் நிதிஷ் ரெட்டி – ரிங்கு சிங் இணை. 10ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டு நம்பிக்கை கொடுத்தனர். 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் நிதிஷ் ரெட்டி. சிறப்பாக விளையாடிய அவரை முஸ்தஃபிசுர் ரஹ்மான் 14 வது ஓவரில் அவுட்டாக்கினார். 7 சிக்சர்களை விளாசி 34 பந்துகளில் 74 ரன்களுடன் வெளியேறினார் நிதிஷ். அடுத்து 26 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய ரிங்கு சிங், 17ஆவது ஓவரில் 53 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாகி பெவிலியின் திரும்பினார்.
ஒருபுறம் ஹர்திக் பாண்டியா ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட, மறுபுறம் ரியான் பிராக் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் அதில் ஒன்று கேட்சானது சோகம். 15 ரன்களில் கிளம்பினார் ரியான். அடுத்து ஹர்திக் பாண்டியா 32 ரன்களுக்கு விக்கெட்டானார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி டக்அவுட். அர்ஷ்தீப் சிங் வந்த வேகத்தில் சிக்ஸர் விளாச அடுத்து விக்கெட்டாகி வெளியேறினார். மயங் யாதவ் 1 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளையும், தஷ்கின் அகமது, தன்ஜிம் ஹசன், முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.