பட மூலாதாரம், TWITTER/ICC
சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது.
முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது.
சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
தொடர்ந்து 4 முறை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வந்த இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஹர்திக் பாண்டியா
2019-க்குப் பிறகு முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதுவும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கு முக்கியமான ஆட்டம். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டீவ் ஸ்மித்தை தவிர்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனார். டாப் 7 வீரர்கள் அனைவருமே 23 முதல் 47 ரன்கள் வரை விளாசி விடைபெற்றனர். ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தியதில் ஹர்திக்கின் பந்துவீச்சுக்கு பெரும்பங்கு உண்டு.
ஹர்திக் வீசிய அவரது முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், அடுத்த ஓவரில், ஸ்டீவ் ஸ்மித், 3வது ஓவரில் மிட்செல் மார்ஷ் என அச்சுறுத்த காத்திருந்த அனைத்து பேட்டர்களையும் வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா.
2017க்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறை.
49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 269 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக், குல்தீப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறிய அந்த ஒரு ஓவர்
270 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 248 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் 30, கில் 37, ராகுல் 32 ரன்கள் எடுத்து விடைபெற்றார்.
களத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை நடந்தது.
ஆஷ்டன் அகர் தனது கடைசி ஓவரை வீச வந்தார். அது ஆட்டத்தின் 36வது ஓவர். முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார்.
அந்த ஷாட் அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை. அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, வார்னரிடம் அகப்பட்டார்.
72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து விடைபெற்றார். விராட் கோலிக்கும் சென்னைக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு.
சென்னை மண்ணில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் ஒன்று சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றுவார். இல்லை எனில், அரைசதத்தையும் கடந்து எதிரணியை திணறடிப்பார். இன்று நடந்தது 2வது பாணி. ஆனாலும் கோலியின் ஆட்டம் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.
சூர்யகுமார் முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்
முக்கியமான தருணத்தில் இறங்குவதற்காக 5வது இடத்தில் களமிறங்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ், கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கினார்.
முதல் பந்திலேயே சூர்யகுமார் க்ளீன் போல்ட். அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை அளித்தது. தொடர்ந்து 3வது முறையாக சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டப்லியூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்த சூர்யா, இந்த முறை அகரிடம் க்ளீன் போல்டானார்.
பட மூலாதாரம், Getty Images
ஆஸி. வெற்றி – ஐசிசி தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் – ஜடேஜா ஜோடி, வெற்றிக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்ந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அவ்வளவு சுலபமாக அவர்கள் இருவரையும் களத்தில் இருக்கச் செய்யவில்லை. ஹர்திக் 40, ஜடேஜா 18 ரன்களில் விடைபெற்றார்.
கடைசி வரை போராடிய டெயில் எண்டர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாமல் போனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஆஸ்திரேலியா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: