நின்று நிதானமாக ஆடிய பவுமா 35 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்த போதும், க்ளாசென் மட்டும் நின்று அதிரடி காட்டினார். அரைசதத்தைக் கடந்து 81 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியனுக்குச் சென்ற போது ஏறக்குறைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிவிட்டுதான் க்ளாசென் அவுட் ஆகியிருந்தார். 18.2 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது. இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.
கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பௌலர்களே மிக முக்கிய காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாக அத்தனை பேருமே ரன்களை வாரி வழங்கி ஏமாற்றியிருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் அப்படி இல்லை. முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே வீசியிருந்தனர். புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்சல் படேல் மூவரும் இணைந்து 10 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மூவரின் தனிப்பட்ட எக்கானமியுமே 6 க்கு கீழ்தான் இருந்தது. 149 டார்கெட்டை டிஃபண்ட் செய்கையில் 10 ஓவர்களில் வெறும் 47 ரன்களை மட்டுமே வழங்கியது பாரட்டப்பட வேண்டியதே. எனில், இந்திய அணி எங்கேதான் சொதப்பியது? கடந்த போட்டியை போன்றே அப்படியே இங்கேயும் சொதப்பிய ஸ்பின்னர்கள்தான் பிரச்னை.
தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் நின்று நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைக்க தொடங்கிய பவுமா – க்ளாசென் கூட்டணி முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களைத் தற்காப்பாக ஆடிவிட்டு ஸ்பின்னர்களை நன்றாகக் கவனித்தார்கள். அக்சருக்கு பதில் ஆறாவது பௌலிங் ஆப்சனாகப் பயன்படுத்தப்பட்ட ஹர்திக் பாண்டடியாவாலும் கட்டுக்கோப்பாக வீச முடியவில்லை.
பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஸ்பின்னர்கள் வீசியிருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும்.