குழந்தை தூங்கும்போது எழுப்பி பால் கொடுக்கலாமா?
பச்சிளம் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்த முதல் 15 நாள்களுக்கு 2 – 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவு நேரம் தவிர, ஒரு நாளில் 4 – 5 மணி நேரம் வரை தொடர்ந்து தூங்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பி பால் கொடுங்கள். எழுப்ப வேண்டும் என்றால், குழந்தையை உருட்டிப் பிரட்டி எடுக்காமல், அவர்களுடைய முதுகு, வயிற்றுப் பகுதியில் மென்மையாகத் தேய்க்கவும். கூடவே தாடைப் பகுதியில் தேய்த்து விடவும். மடியில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதுவே அவர்களை மென்மையாக எழுப்பிவிடும்.
படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுக்கலாமா ?
குழந்தை பிறந்த சில நாள்கள் வரை மிகவும் சோர்வாக உணர்கிற அம்மாக்கள் படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மட்டும் பரிசோதித்து, பக்கவாட்டில் படுக்க வைத்துக் கொடுக்கலாம். ஆனால், இதை வழக்கமாக்கக் கூடாது. அம்மாக்களால் எழ இயலாத நேரங்களில் மட்டும் இப்படிக் கொடுக்கலாம்.
சரியான நேர இடைவெளியில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில், எடை குறைவு ஏற்படும். மேலும், நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படும. மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் குழந்தைக்கு சரியான வேளையில், இடைவெளியில், தேவையான அளவு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
தொகுப்பு: வெ.கௌசல்யா