ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், பல விதங்களிலும் உடலுக்கு அத்தியாவசியமானது. இதன் அளவு குறைவதன் காரணமாக ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைக்கு ஆட்பட நேர்கிறது. ஹீமோகுளோபின் அளவை உணவுப் பழக்கத்தின் வழியாக எப்படி அதிகரிக்கலாம் என விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்.
“சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பல தரப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கான அடிப்படை. நாம் சுவாசிக்கிற ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்வதில் ஹீமோகுளோபினின் பங்கு அதிக அளவில் இருக்கிறது.

பருவம் எய்திய பிறகும், கர்ப்பம் தரித்த பிறகும், குடல் புண் போன்ற காரணங்களால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதன் விளைவாகவும், ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ரத்தசோகையின் காரணமாக மூச்சிரைப்பு, உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கர்ப்பம் தரித்தவர்கள் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிப்பது அவசியமானது.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்…
அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு அனைத்து அசைவ உணவுகளிலும் புரதம் மற்றும் இரும்புச் சத்துக் கிடைத்துவிடும். குறிப்பாகச் சொல்வதானால் மாட்டு ஈரல், ஆட்டு ஈரல், கடல் உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுகையில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அசைவம் எடுத்துக்கொள்ளலாம்.
சைவம் சாப்பிடுகிறவர்கள் என்றால் பருப்பு வகைகள், பயறு வகைகள் மற்றும் கீரை வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. சம்பா அவல், மணத்தக்காளி வத்தல், சுண்டல், முருங்கைக்கீரை சூப் அல்லது பொரியல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

இவற்றில் இரும்புச்சத்தும், கால்சியமும் இருக்கின்றன. கரும்புச்சாறு, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றில் மேலும் சில தாதுக்கள் இருக்கின்றன. அஸ்கா சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு மாதுளம் பழத்தை அதிக அளவில் சாப்பிடக் கொடுப்பார்கள். மாதுளை, பீட்ரூட் ஆகியவை ரத்த சிவப்பணுக் களின் எண்ணிக்கையைப் பெருக்கும், ரத்தசோகையைத் தடுக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. மருத்துவபூர்வ மாகப் பார்த்தால் மாதுளை மற்றும் பீட்ரூட்டுக்கும் ரத்தசோகைக்கும் தொடர்பே இல்லை.
ரத்த சிவப்பணுக்களில் இரும்பு மற்றும் புரதச்சத்தால் ஆன கூறே ஹீமோகுளோபின். எனவே, புரதப் பற்றாக்குறை கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கலாம் என்பதால், புரதச்சத்துப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
இரும்புச் சத்துள்ள உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வது மட்டும் போதாது. இரும்புச் சத்தை உட்கிரகிக்க வேண்டுமெனில் அதற்கு விட்டமின் சி தேவை. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொண்டால்தான் இரும்புச்சத்து உடலுக்கு முழுமையாகச் சென்று சேரும்.

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு அருந்தலாம். டீ, காபி, ஆல்கஹால் ஆகியவை இரும்புச் சத்து முழுமையாக உட்செல்வதைத் தடுக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குடல் புண் உள்ளவர்கள் அதைச் சரி செய்ய வாழைப்பூ, சுண்டக்காய் ஆகியவற்றைச் சேர்த்து குடல் புண்ணை குணப்படுத்த வேண்டும்” என்கிறார் பிச்சையா காசிநாதன்.