கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஃபிரிட்ஜ் தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக் கொள்கிறோம் பலர். ஆனால் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக்காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும் என்கிறார், சித்தமருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ஜெ. ஸ்ரீராம். சீரகத் தண்ணீரை எப்படி பருக வேண்டும்… அதன் பயன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் அவர்…

’’சீரகம் என்பது சமையலறையில் நாம் பயன்படுத்தும் மிக முக்கிய சமையல் பொருள். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல சத்துகள் உள்ளன. கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைக் கொடுப்பதில் சீரகத்திற்கு மிக முக்கியப் பங்கு உள்ளது.
சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?
சீரகம் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்வது கூடாது. தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அதிகமாக எடுத்துக்கொள்வது உடலில் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிவிடும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் அளவிற்கு மட்டும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின்பு பருகவும். இப்படி கொதிக்க வைத்த நீரை ஆறவிடாமல் பிளாஸ்கில் ஊற்றி வைத்துப் பருகலாம். இப்படி ஒருமுறை கொதிக்க வைத்த நீரை 12 மணி நேரம் வரை வைத்து பருகலாம். அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக சீரகம் போட்டு கொதிக்கவைத்தும் பருகலாம்.

வழக்கமாக, கொதிக்கவைத்த நீரை பருகும்போது நீரில் இருக்கும் தாதுப்புகள் ஆவியாகிவிடும் என்பதால் அது சுவை இல்லாமல் இருக்கும். ஆனால் சீரக தண்ணீரை கொதிக்கவைக்கும் போது சீரகத்தில் உள்ள சத்துகள் நீருடன் remineralization ஆவதால் குடிப்பதற்கு சுவையாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
சீரக தண்ணீரின் பலன்கள்…
* கோடைக்காலத்தில் அதிகமாக வியர்க்கும்போது அதிகளவில் பொட்டாசியம் வெளியேறும். சீரக தண்ணீரை பருகுவதன் மூலம் அதனை ஈடு செய்யலாம்.
* செரிமான பிரச்னையை சரி செய்யும்.
* உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* குடல் பிரச்னை உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்
* சீரண சக்தியை மேம்படுத்தும்.
பேதி நிற்க..
சீரகம் -2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனை, எண்ணெய் விடாமல் வெறுமனே வறுத்துப் பொரிந்ததும், அடுப்பை அணைத்து அதே சூடான சட்டியில் 2 ஸ்பூன் தேனை விடவும். அப்போது சீரகம் பொங்கும். அந்த நேரத்தில், 200 மிலி தண்ணீரை ஊற்றி மீண்டும் அடுப்பை பற்றவைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி வடித்து, இளம் சூட்டில், 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து குடிக்கவும். இதன் மூலம் பேதி நிற்கும். தேவைப்பட்டால் 2 அல்லது 3 முறை குடிக்க, சூட்டினால் வரும் பேதி நிற்கும்.

யாரெல்லாம் பருகலாம்
சிறுநீரகப் பிரச்னை, சிறுநீரகத்தில் நாள்பட்ட அல்லது குறைந்தளவு பாதிப்பு உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை பருகக் கூடாது.
மற்றபடி சிறுவயது குழந்தைகள் முதல் அனைவரும் பருகலாம். கோடைக்காலம் என்றில்லாமல் வருடம் முழுவதும் சீரகத் தண்ணீரைப் பருகலாம்.