சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன.
இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தச் சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் குறித்தும், அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்தும் விரிவாகப் பேசினார் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர்.
“தற்போது பரவி வரும் ஏவியன் இன்ஃபுளுயன்சா (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சலை H5N1 என்று குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வேளச்சேரி மற்றும் அடையார் ஆகிய மண்டலங்களில் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இறந்து கிடந்தன.
அவற்றைச் சேகரித்துச் சோதனை செய்தபோது, அவை H5N1 எனும் கொடிய ஏவியன் இன்ஃபுளுயன்சா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.