போட்டிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் ஹசன், வங்கதேச இன்னிங்ஸின் போது கோலியின் போலி த்ரோ சம்பவத்தை நடுவர்கள் கவனிக்கத் தவறவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஏழாவது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த போது, கோலி பந்தே இல்லாமல் ஒரு த்ரோவை செய்வது போல் வேடிக்கையாகச் செய்திருந்தார். நடுவர்கள் மற்றும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் என யாருமே அப்போது அதைக் கவனிக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் ஹர்ஷா போக்லேவும் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “போலி பீல்டிங் சம்பவத்தை, யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. நடுவர்கள், பேட்டர்கள், ரசிகர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. சட்டம் 41.5 போலி ஃபீல்டிங்கைத் தண்டிக்க வழிவகை செய்கிறது (நடுவர் இன்னும் அதை விளக்க வேண்டும்) ஆனால் இந்த விஷயத்தில் அந்த போலி ஃபீல்டிங்கை யாரும் கவனிக்கவே இல்லை” என ஹர்ஷா போக்லே பதிவிட்டிருக்கிறார்.
கோலியின் போலியான த்ரோ களத்தில் யாருடைய கவனத்தையாவது சிதறடித்திருந்தால் மட்டுமே அது பெனால்டி வழங்கக்கூடிய குற்றமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால், இங்கே வங்கதேச பேட்ஸ்மேன்கள் உட்பட யாருமே அதைக் கவனிக்கக்கூடவில்லை. நூருல்கூட ஹைலைட்ஸில் இதைக் கவனித்த பின்னரே குற்றம் சாட்டியிருக்கிறார். எனில், இதனால் எப்படிக் கவனச்சிதறல் ஏற்பட்டிருக்கும்?