வேர் சிகிச்சை செய்யும் முறை:
”சேதம் அடைந்த பற்களைக் காப்பாற்றவே ரூட் கேனல் சிகிச்சை முறை. பொதுவாக முன்பற்களில் ஒரு வேரும், கடைவாய்ப் பற்களில் இரண்டிலிருந்து நான்கு வேர்களும் இருக்கும். சேதம் அடைந்த பல்லின் வேரில் இருக்கும் சதைகளைச் சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் கிருமிகள் உள்ளே செல்லாமல் இருக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். பற்களின் நடுவே துளையிட்டு வேரின் கடைசி வரை சென்று, அந்தப் பல்லை சரி செய்வர்.
இதைச் செய்துகொள்வதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து மீண்டும் பற்கள் முளைக்க வேண்டும். இருப்பினும் பால் பற்களுக்கான வேர் சிகிச்சை முறையும் உள்ளது. பெரியவர்கள் செய்துகொள்வதற்கான வேர் சிகிச்சை முறையும் உள்ளது. பெரியவர்களிலும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் வேர் சிகிச்சை செய்து கொள்ளலாம். பற்களை எடுப்பதற்குத்தான் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாம் சரி பார்க்க வேண்டும். இதற்கு அவசியமில்லை.
இந்த சிகிச்சைக்கான கட்டணம் நகரங்களைப் பொறுத்து மாறுபடலாம். மதுரை போன்ற நகரங்களில் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையிலும், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வேர் சிகிச்சை முறை முன்பைவிட இப்போது மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்பு கருவிகள் இல்லாமல் கையால்தான் இந்த சிகிச்சை செய்துகொண்டிருந்தார்கள். இப்போது நிறைய நவீனக் கருவிகள் வந்துவிட்டன. எக்ஸ்ரே எடுக்காமலேயே பற்களில் வேரின் அளவைக்கூடக் கணக்கிடக் கருவி, பல்லைத் துளையிடுவதற்கு ஏற்ற டிரில்லிங் கருவி என நவீனத்துவம் அடைந்திருக்கிறது. இதனால் விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் சிகிச்சை செய்ய முடியும்.
வேர் சிகிச்சை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. செயற்கையாக எதையும் இந்தச் சிகிச்சை முறையில் சேர்ப்பதில்லை. வேர் சிகிச்சை செய்த பல்லில் சரியான முறையில் சிகிச்சை செய்திருந்தால் மீண்டும் அந்தப் பல்லில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வேர் சிகிச்சை செய்த பல்லாகவே இருந்தாலும்கூட, அந்தப் பல்லின் ஈறுகளில் பிரச்னை ஏற்பட்டு, வலியோ அல்லது பல் ஆடும் பிரச்னை வந்தாலோ அதைச் சரிசெய்ய முடியாது.”