Doping Test: மரடோனா தொடங்கி இந்தியாவின் கமல்பிரீட் கவுர் வரை; தொடரும் சோதனையில் நடப்பதென்ன?

Share

விளையாட்டு உலகில் அதுவும் குறிப்பாக தடகள வீரர்களிடத்தில் ஊக்க மருந்து சோதனை மிக பொதுவாக நடக்கும் ஒன்று. தன் திறமையை வைத்து வெற்றிக்காக போராடுவதே ஒவ்வொரு விளையாட்டின் அடிப்படை குணம்.

திறமைக்கு மீறி வெற்றியை அடைவதற்கு ஊக்க மருந்து போன்ற பிற பொருட்களை பயன்படுத்துவது விளையாடின் அறத்தை மொத்தமாக குலைக்கும் ஒன்று. ஊக்கமருந்து பயன்படுத்துவது விளையாட்டின் ஆன்மாவைக் குலைக்கும் ஒன்று என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அது உடலுக்கும் பாதுகாப்பான விஷயம் அல்ல.

Athletics

`ஊக்கமருந்து சோதனை’ என்பது போட்டிகளில் பங்குபெறும் வீரர் ஏதாவது ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளாரா என்பதைக் கண்டறிய நடத்தப்படும் ஒன்று. இதில் பங்கு பெரும் வீரரின் ரத்தமும் சிறுநீரும் பரிசோதிக்க எடுக்கப்படும். அதில் ஊக்க மருந்தாகக் கருதப்படும் விஷயங்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். அது போன்ற விஷயங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவ்வீரர் அல்லது வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அறிவிக்கப்படும். தடகளத்தில் அதிகமாக அனாபோலிக் (anabolic) ஊக்க மருந்துகள் பயன்படுத்தப்படும். இந்த ஊக்க மருந்து ஒருவரின் டெஸ்டோஸ்டீரோன் (testosterone) அளவை அதிகரிக்கும். இதை பயன்படுத்துவதால் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.

`துப்பாக்கி சுடுதல்’ போன்ற அதிக கவனம் தேவைப்படுகிற விளையாட்டில் Propornolol என்ற ஊக்க மருந்து பயன்படுத்துவது வழக்கம். இந்த ஊக்க மருந்து ஒருவரை போட்டியில் அதிகமாக கவனம் செலுத்த வைக்க உதவும்.

ஒரு வீரர் ஊக்கமருந்து பயன்படுத்துவது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் விளையாட்டு வாழ்க்கைக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும். அக்குற்றத்தால் அவர்கள் மீதிருக்கும் மரியாதையும் ஒரே நொடியில் மறைந்து விடும். அவர்கள் வென்ற பதக்கங்கள் திரும்பி பெறப்பட்ட வரலாறுகளும் உண்டு. இவை மட்டுமல்லாமல் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் அல்லது முழுமையாகத் தடை செய்யப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஊக்க மருந்து பயன்படுத்தினால் நான்கு ஆண்டு சிறையும், 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்ற விதிமுறை 2018-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

ஆனால் World Anti Doping Agency இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஊக்க மருந்து பட்டியலுக்குக் கீழ் வரும் சில ஊக்க மருந்துகள் மருத்துவ உலகில் தடை செய்யப்படாமல் உள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்பதற்கு அது எதிரானதாக இருந்தாலும் உடல் நிலை சரியில்லாத பிரச்னைகளுக்கு அதை மருத்துவர்கள் பரிந்துரை செய்யலாம். இதனால் 2020-ம் ஆண்டு இவ்விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் முதல் முறை நான்காண்டுகள் விளையாட தடையும் அடுத்த முறை வாழ்நாள் தடையும் விதிக்கப்படும் என்று அறிவித்தனர். இதோடு சேர்த்து இக்குற்றத்தில் அவர்களின் பயிற்சியாளர்கள் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊக்க மருந்து – Representative image

தற்போது காமன்வெல்த் போட்டிகளில் பங்கு பெற விருந்த தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் பர்மிங்கம் செல்ல முடியாத நிலையில் உள்ளார். அவர் மட்டுமின்றி இந்தியாவைச் சேர்ந்த டிரிபிள் ஜும்பெர் ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். இது போன்றவை காலங்காலமாக தொடர்பவையே. கால்பந்தின் புகழ் மரடோனா 1994-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதால் 15 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். 1988-ல் கனடாவின் பிரபல ஓட்டப்பந்தய வீரர் பெண் ஜான்சன் தங்கப்பதக்கம் வென்ற பின் சிறுநீரகத்தில் ஊக்க மருந்து கண்டறியப்பட்டது. 2012-ல் சைக்கிள் பந்தய வீரர் லென்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. அதனால் அவர் 1998 முதல் வென்ற பதக்கங்கள் எல்லாம் திரும்பி பெறப்பட்டது. கிரிக்கெட்டில் கூட ஷேன் வார்னே, ஷோயாப் அக்தர் போன்றவர்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை 2019-ல் மட்டும் 147 வீரர்கள் ஊக்க மருந்து பயன்பாட்டிற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2005-க்குப் பின் ஒரு ஆண்டில் அதிக பேர் தண்டிக்கப்பட்டது 2019-ல் தான். இந்த ஆண்டு இந்தியாவில் வட்ட எறிதல் வீராங்கனை கமல்பிரீட் கவுர் சிக்கியபோது ஊக்க மருந்து சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆறாவது இடம் பிடித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்த ஒருவர். ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுத் தொடர் என எதிலும் பங்கு பெற முடியாத நிலையில் உள்ளார். அதேபோல் இந்தியாவில் இதுக்கு முன் 2004-ல் பளுதூக்குதலில் பிரதிமா குமாரி & சனமச்ச சனு, 2010-ல் தொடர் ஓட்ட பந்தய வீரர்கள் மந்திப், அஸ்வினி, சீனி, 2006-ல் வட்டு எரிதல் வீராங்கனை சீமா புனியா, 2010-ல் மல்யுத்த வீரர் ராஜீவ் மற்றும் குண்டு எரிதல் வீரர் சௌரப் போன்ற பலர் ஊக்க மருந்து சோதனைககளில் தோல்வியுற்ற பட்டியல் மிக நீண்டது.

விளையாட்டை தீவிரமாக எடுத்து இந்தியாவின் ஜெர்சி அணிந்து விளையாடும் ஒவ்வொரு வீரருக்கு பின்னும் பல வருட கடின உழைப்பு உண்டு. அதில் பல வீரர்கள் கிராமப்புற பின்னணியில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வளர்ந்தவர்கள். இப்படி சிறு வயதிலிருந்து ஆசைப்பட்ட கனவுகள் எல்லாம் ஊக்கமருந்து என்ற ஒரே வார்த்தையில் பெரும் பாதிப்படைகிறது. இத்தனை நாள் சாதித்த சாதனைகள் எல்லாம் கேள்விக்குறி ஆவதை பார்க்கும் போது பரிதாபமாகவே உள்ளது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com