சாதாரண பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்புத்தன்மை வாய்ந்த (ஆன்டிஃபங்கல்) ஷாம்பு பரிந்துரைப்போம். டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகைக் குறைக்கலாம். அதிக அளவு பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஷாம்புவுடன், மாத்திரைகளையும் சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். ஆனால், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்.
எண்ணெய் சுரப்பியினால் ஏற்படும் பொடுகுப் பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனில், கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதுடன் சின்னச்சின்ன பருக்கள் வர வாய்ப்புள்ளது. சாதாரணமான பொடுகுப் பிரச்னைகளால் தலை முடி உதிர வாய்ப்பு இல்லை. ஆனால், பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம்.
மேலும், தொற்றுதல் மூலமாக பொடுகு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதாவது தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும். இதற்காக, ஒட்டுவார் ஒட்டி என்று பயப்பட வேண்டாம். அருகில் தூங்குபவர்களிடமிருந்து நமக்குப் பரவக்கூடிய தொற்றுவியாதி இல்லை.” என்கிறார் டாக்டர் காளீஸ்வரன்.
பொடுகிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்னென்ன?
”ஒருவர் பயன்படுத்தும் சீப்பு, தலையணைகளை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. முடி அதிகம் வறட்சியுடன் (Dryness) இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஹேர் கன்டிஷனர் பயன்படுத்தலாம். அதுவே ஈரப்பசையுடன் இருக்கும்போது ஷாம்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக இறுக்கமான முடி அலங்காரங்கள், அதிகம் வெயிலில் அலைவது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். தூசி நிறைந்த இடங்களில் உள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரைக்கும் ஷாம்புவை வாரத்துக்கு நான்கு முறையும், மற்றவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையும் பயன்படுத்தி இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்” என்றார்.
உ.சிவராமன்
படம்: வீ.சிவக்குமார்
பொடுகு போயே போச்!
பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சைமுறைகளைப் பற்றி சித்த மருத்துவர் முகமது மாலிக் சொல்லும் டிப்ஸ்.
கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்.
மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.
அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.