நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.
டிவியில் மூழ்குவது மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.
கலர்ஃபுல் ஜங்க் ஃபுட் இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், ‘நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் ‘ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.