சிலருக்கு 50 வயது வரை தலைவலி வந்திருக்காது. 50 வயதுக்குப் பிறகு திடீரென அடிக்கடி தலைவலி வருகிறது என்றாலும் அவசியம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.
இன்னொரு வகை தலைவலி உண்டு. ‘இடி விழுந்தது போன்ற தலைவலி’ என்பார்கள். அதை Thunderclap headache என்கிறோம். அதாவது தலை வலிக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அது உச்சத்தை அடைந்திருக்கும். அது மிக மிக ஆபத்தான தலைவலி. ஒரு நொடிகூட தாமதிக்காதல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.
சிலருக்கு சுளீர், சுளீரென தலைவலி வரும். அப்போது கண்கள் சிவக்கும். சில நிமிடங்களில் தானாக வலி போய் விடும். இன்னும் சிலருக்கு தினமும் அலாரம் வைத்ததுபோல குறிப்பிட்ட நேரத்தில் தலைவலி வரும். சில நிமிடங்கள் வலிக்கும், பிறகு தானாகச் சரியாகிவிடும். மூன்று மாதங்களோ, ஆறு மாதங்களோ கழித்து அதே மாதிரி மறுபடி வரும்.
நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் அவர் கேட்கும் கேள்விகளிலேயே அது எந்த மாதிரியான தலைவலி என்று கண்டுபிடித்துவிடுவார்.
எனவே ஒவ்வொரு விதமான தலைவலிக்கும் ஒவ்வொருவித சிகிச்சை இருக்கிறது. பொதுவான ஒரு மருந்தால் எல்லாவற்றையும் குணப்படுத்திவிட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருந்து பரிந்துரைக்கப்படும். நீங்கள் நினைக்கிற மாதிரி பெயின் கில்லர் போட்டுப் பழகுவது சரியானதும் அல்ல. வலிக்கான காரணமறிந்து சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.