நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும் சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது.
தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்.

சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சாப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட் உடலில் சேர்ந்திருக்கும். அந்நிலையில் வாழைப்பழத்தின் மூலம் கூடுதல் கார்போஹைட்ரேட் உடலில் சேரும். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைப்பழத்தைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. மலச்சிக்கலைப் போக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் இதை எடுத்துக்கொள்வோர், மேற்குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம்.
ஆரோக்கியமான நபர், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். பசி நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து, இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைத்துவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.