Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் அடிக்கடி தொண்டைவலியும் தொண்டைக் கரகரப்பும் வருகின்றன. தலை பாரமாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளவும் எளிய வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
வானிலை மாற்றத்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டைவலி, தொண்டைக் கரகரப்பு மட்டுமன்றி, பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் வரலாம். இந்தப் பருவத்தில் தாக்கும் இத்தகைய பிரச்னைகளிலிருந்து விலகி இருக்க, நம் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
நமது சுற்றுச்சூழலில் பூமி மட்டுமல்ல, காற்றும் மிக அதிகமாக மாசடைந்திருக்கிறது. ஆகாயத்திலிருந்து பனி பொழியும்போது காற்றிலுள்ள மாசையும், அதன் கெடுதல்களையும் சேர்த்தே அது சுமந்து வருகிறது. அதனால் மழை மற்றும் பனிக்காலத்தில் இந்தப் பிரச்னைகள் நம்மை அதிகம் தாக்குகின்றன.
துளசியும் ஏலக்காயும் சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை அருந்துவது, கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது போன்றவை தொண்டைக் கரகரப்பு, தலைபாரம் போன்றவற்றுக்கு குணமளிக்கும்.