எனக்கு இரண்டு மகன்கள். முதல் மகனுக்கு 12 வயதாகிறது. அவனுக்கு 5 வயதில் இருந்தே மூக்கில் திடீரென்று ரத்தம் வரும் பிரச்னை இருக்கிறது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு வருகிறது. காய்ச்சல் வந்தால் சில நேரங்களில் ரத்தம் வருகிறது. இரண்டாவது மகனுக்கு 7 வயது. அவனுக்கும் அவனுடைய 5 வயதில் ஒரு முறை மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. வலி எதுவும் இல்லை. 3 முதல் 5 நிமிடங்களுக்கு இந்த ரத்தக் கசிவு இருக்கிறது. என் கணவர் வீட்டில் ஒரு குழந்தைக்கும் இதே பிரச்னை உள்ளது. இதன் காரணம் அறிய விரும்புகிறேன். இது பயப்பட வேண்டிய பிரச்னையா?
அனித ப்ரீத்தி (விகடன் இணையதளத்திலிருந்து…)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.
உங்கள் கேள்வியில் பிரச்னை குறித்த முழுமையான விவரங்கள் இல்லை. அதாவது இரண்டு குழந்தைகளுக்கும் மூக்கின் இரண்டு துவாரங்களில் இருந்தும் ரத்தம் வருகிறதா, ஒரு துவாரத்திலிருந்து மட்டுமா அல்லது இரண்டிலும் மாறி மாறி வருகிறதா என்று குறிப்பிடவில்லை.
காய்ச்சல் வரும்போது ரத்தம் வருவதாகக் குறிப்பிட்டிருப்பது சில குழந்தைகள் விஷயத்தில் சகஜமாக நடக்கும். அதாவது காய்ச்சல் வந்து சளிப்பிடித்திருக்கும் நிலையில் சில குழந்தைகள் மூக்கை நோண்டுவதால் இப்படி வரலாம். ஏனெனில் மூக்கு துவாரங்களில் உள்ளவை மிக மெல்லிய ரத்தக்குழாய்கள்.