Doctor Vikatan: எனக்கு மாம்பழம் சாப்பிட்டால் அடுத்த நாளே முகம் முழுவதும் கட்டிகள் வருகின்றன. மாம்பழம் சூடு… அதனால் அப்படித்தான் வரும் என்கிறார்கள். அது உண்மையா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரையில் மாம்பழம் சூடு என்பது தவறான நம்பிக்கை. சிலருக்கு சாக்லேட், சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் அதிகரிப்பதாகச் சொல்வார்கள். ஏற்கெனவே எண்ணெய்ப்பசையான சருமம் உள்ளவர்களுக்கு இப்படி ஆகலாம். சாக்லேட் சாப்பிடுகிற எல்லோருக்கும் இப்படி பருக்கள் வருவதில்லை. அதே போன்றதுதான் மாம்பழமும்.
ஆயுர்வேத மருத்துவப்படி பார்த்தால் மாம்பழம் சூடு என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆயுர்வேதம் சொல்கிற வாதம்-பித்தம்- கபம் பிரிவுகளில் பித்த உடம்புக்காரர்கள் மாம்பழம் சாப்பிடும்போது சூடு அதிகமாகி கட்டிகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வோர் உணவும் அதைச் சாப்பிடுகிறவரின் உடல் தன்மையைப் பொறுத்து ரியாக்ஷனை காட்டும். மாம்பழம் சாப்பிட்டதால் கட்டிகள் வந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்… நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிட்டீர்கள் என்பதும் இங்கே முக்கியம். அளவுக்கதிகமாகச் சாப்பிடும் எதுவும் அதற்கான பக்க விளைவுகளைக் காட்டவே செய்யும்.

கோடைக்காலத்தில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சரியாகச் சுத்தம் செய்யாததால் சருமத் துவாரங்கள் அடைபட்டு, அதன் விளைவாகவும் கட்டிகள் வரலாம். தினமும் இரு முறை குளிப்பது உடலைக் குளிர்ச்சியாக வைப்பதோடு, சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. எனவே விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வரும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.