வேளா வேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன. பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான காரணமே முறையற்ற உணவுப்பழக்கம்தான். வருடக்கணக்கில் உப்பிலும் எண்ணெயிலும் ஊறும் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புடன் வரும் நபர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது. மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது இதன் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு அதிகம். மலச்சிக்கல் காரணமாக ஆசனவாயில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவது சாதாரணம். மலச்சிக்கல் இல்லாமல் சிலருக்கு இப்படி ரத்தப்போக்கு இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுகினால், அவர் கொலனோஸ்கோப்பி என்ற பரிசோதனையின் மூலம் நோய் பாதிப்பை உறுதிசெய்வார். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.
வயிறு தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியத்தோடு கடந்துவிடக்கூடாது. இந்தப் பிரச்னைகளால் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். மெள்ள மெள்ள செரிமான மண்டல செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே, முதல் வேலையாக உங்கள் கணவரை குடல், இரைப்பை மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.