பிறந்த குழந்தைக்கு டால்கம் பவுடர் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. டால்க் என்பது ஒருவகையான டஸ்ட். பிறந்த குழந்தையின் சருமம் மட்டுமல்ல, நுரையீரலும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே டால்கம் பவுடர் போடும்போது அதை குழந்தைகள் சுவாசிப்பதால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
‘அதெப்படி….? குளிப்பாட்டியதும் குழந்தைக்கு பவுடர் போடாமல் எப்படி விட முடியும்’ என சிலர் கேட்கலாம். கட்டாயம் பவுடர் போட்டே தீருவேன் என்பவர்கள், கார்ன் ஸ்டார்ச் உபயோகிக்கலாம். அதாவது சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும் பவுடரை குழந்தைக்கு உபயோகிக்கலாம். அதேபோல ஆரோ ரூட் எனப்படும் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் பவுடர் கிடைக்கிறது.
சரும மருத்துவரின் ஆலோசனையோடு இவற்றில் ஒன்றை தரமான நிறுவனத் தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். குழந்தைகளின் உடலில் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து காற்றோட்டமான உடைகளை அணிவித்து, அந்தந்த வானிலைக்கேற்ப பத்திரமாகப் பார்த்துக்கொண்டாலே போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.