தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பலரும். அப்படியிருக்கையில் ஹிமாலயன் வாட்டரின் அதிகப்படியான விலை ஏற்புடையதாக இருக்காது. சாமானியர்களுக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. இத்தனை நல்ல தன்மைகள் கொண்ட ஹிமாலயன் வாட்டர், பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பிளாஸ்டிக் கெடுதல் என பிரசாரம் செய்கிறோம். அதிலுள்ள ரசாயனங்கள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை பாதித்து நோய் எதிர்ப்புத்திறனையும் மட்டுப்படுத்தக்கூடியவை.
பொதுவாகவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் phthalates எனப்படும் ரசாயனம் இருப்பதால், அவற்றின் நீண்டகால உபயோகம், ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதைக் கருத்தில் கொண்டு தண்ணீரை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஹிமாலயன் வாட்டருக்கும் அதுவே பொருந்தும்.
உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. அதற்கு இப்படிப்பட்ட காஸ்ட்லியான தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. காய்ச்சி, வடிகட்டி, ஆறவைத்த சுத்தமான தண்ணீரே ஆரோக்கியமானதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.