எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு பிரசவமானது. அதன் பிறகு அந்தரங்க உறுப்பில் தளர்வை உணர்கிறேன். கீகெல் பயிற்சிகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறேன். அது இந்தப் பிரச்னைக்கு உதவுமா? அதை எப்படிச் செய்ய வேண்டும் என விளக்க முடியுமா?
மகேஸ்வரி (விகடன் இணையதளத்திலிருந்து…)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணி
பிரசவித்த பெண்ணின் உடல், பிரசவத்துக்கு முந்தைய நார்மல் நிலையை அடைய 6 வாரங்கள் ஆகும். இவற்றில் சில பெண்களுக்கு பிரத்யேகமாக சில பிரச்னைகள் வரலாம். பிரசவமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 58 சதவிகிதம் பேருக்கு பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாம்பத்திய உறவில் பிரச்னைகள் வருவது தெரிய வந்தது.
சுகப்பிரசவத்தில் குழந்தை பெறும்போது பெண்களுக்கு வெஜைனா பகுதியானது பெருமளவில் விரிந்து கொடுக்கிறது. அப்படி விரிந்த பகுதியானது பழையநிலைக்கு முழுமையாகத் திரும்புவதில்லை. இதன் காரணமாக பிரசவத்துக்குப் பிறகான பாலியல் உறவில் பல பெண்களுக்கும் முந்தைய முழுமையான உணர்வு கிடைப்பதில்லை.

சில பெண்களுக்கு இது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, உறவு கொள்வதையே தவிர்க்க வைப்பதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. நம்முடைய நெஞ்சுப் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் பிரிப்பது உதரவிதானம். அதே மாதிரி பெண்களின் இடுப்புப் பகுதியிலும் இப்படியொரு பகுதி இருக்கிறது. இது தசைகள், திசுக்களால் உருவான ஓர் அமைப்பு. இதனுடன் சிறுநீர்ப்பாதை, கர்ப்பப்பை, வெஜைனா, மலக்குடல் என எல்லாம் தொடர்புடையவை.
இடுப்பெலும்புப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் தளரும்போது வெஜைனா தசைகளும் தளர்ந்து போகின்றன. வெஜைனா பகுதி மட்டும் தளர்வதில்லை, கூடவே இடுப்பெலும்புப் பகுதியும் சேர்ந்து தளர்வதால்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு நீர்ப்பை இறக்கம் ஏற்பட்டு சிறுநீரை அடக்க முடியாத நிலை வருகிறது. தாம்பத்திய உறவிலும் பிரச்னை வருகிறது.