ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். அதனால் அதிக தாகம் எடுக்கிறது. திசுக்களும் பலமிழக்கின்றன, நீர்ச்சத்தும் இல்லை என்ற பட்சத்தில் உடல் எடையும் குறைகிறது.

சர்க்கரையானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுவதால், அந்தரங்க உறுப்பில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதனால்தான் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. எனவே இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய அத்தனை செயல்களுக்கும் காரணம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான்.
குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து நீரிழிவு பிரச்னை இருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் தவறாமல் பின்பற்றும்போது ரத்தச் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளும் மறையும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.