யூரிக் ஆசிட் என்பது நம் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும். அதன் மூலம் உடல், யூரிக் அமிலத்தின் அளவை சரியான அளவில் தக்கவைக்கும். சிலருக்கு மரபியல் காரணமாக இயல்பிலேயே அளவுக்கதிக யூரிக் அமிலம் சுரக்கும் அல்லது யூரிக் அமிலத்தை அவர்களால் முழுமையாக வெளியேற்ற முடியாமல் இருக்கும். யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது அது படிகங்களாக உருமாறி, எலும்பு மூட்டுகளில் போய் சேர்ந்துகொள்ளும். அந்த நிலையை “கௌட்’ (Gout) என்கிறோம். பொடாக்ரா (podagra) என்ற இந்தப் பிரச்னை பொதுவாக பெருவிரலை பாதிக்கிறது. இதனால் வலி அதிகமாக இருக்கும்.
இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காவிட்டாலும் சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும். சில நேரங்களில் யூரிக் அமிலமானது நீண்ட நாள்களாகச் சேர்ந்ததன் விளைவாக டோஃபி (Tophi) என்ற பிரச்னை வரலாம். யூரிக் அமிலம் படிகங்களாக மாறி மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் படிந்துவிடும். இந்தப் படிகங்களின் திரட்சியே டோஃபி என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகலாம்.

இந்த பாதிப்பைத் தவிர்க்க அசைவ உணவுகளைத் தவிர்ப்பது, ஆல்கஹாலை தவிர்ப்பது, ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரைச்சத்து அதிகமுள்ள பழங்களை நிறைய எடுப்பதைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். சிறிதளவு பழங்கள் சாப்பிடுவதால் யூரிக் ஆசிட் அதிகரிக்காது. அளவுக்கதிகமாக எடுக்கும்போதுதான் பிரச்னையே.
இது மட்டுமன்றி, உயர் ரத்த அழுத்தம், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பதும் இந்தப் பிரச்னையை உருவாக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். அதுதான் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். ஒருவேளை மரபியல் ரீதியாக ஒருவருக்கு யூரிக் ஆசிட் அதிகம் சுரக்கும் பிரச்னை இருந்தால், மருத்துவரிடம் பேசி, சிகிச்சை எடுப்பது பலன் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.