Doctor Vikatan: நான் பல நாள்களாக தினமும் அமுக்கரா மருந்து எடுத்து வருகிறேன். அதனால் எனக்கு இரவில் நல்ல தூக்கம் வருகிறது. இதை எந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரிலும் நான் எடுக்கவில்லை. இணையதளத்தில் கட்டுரைகளைப் பார்த்து நானாகவே பின்பற்றி வருகிறேன். தினமும் அமுக்கரா எனப்படும் அஷ்வகந்தா மருந்து எடுப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
அமுக்கரா மாத்திரை அல்லது சூரணம் மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கும் அற்புதமான சித்த மருந்து. மருந்து என்று வரும்போது, அதுவும் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் இருப்பின் சுயமாக எடுக்காமல், ஒரு மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவர், தேவைப்படும் மருந்திற்கான நாள் கணக்கு, மருந்தின் அளவு போன்றவற்றை முறைப்படுத்திக் கொடுப்பார். சித்த மருந்துகள் போன்ற இயற்கை மருந்துகளாக இருப்பினும் நீண்ட நாள் என்று வரும் போது, மருத்துவரின் மேற்பார்வை முக்கியம்.