உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது ரத்தத்தின் தன்மையும் (viscosity) மாறும். சாதாரணமாக ரத்தம் நீர்த்த நிலையில் இருக்கும். பாடி பில்டர்களும் அதீத உடற்பயிற்சி பிரியர்களும் உடலைக் கட்டுக்கோப்பாகக் காட்ட, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்தத்தின் தன்மை எண்ணெய் போல மாறும். விமானத்தில் பயணம் செய்யும்போதும், நீண்டதூரப் பயணம் போகும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கச் சொல்வதன் பின்னணியும் இதுதான்.
இன்று சரியான பயிற்சியோ, நிபுணத்துவமோ பெறாதவர்களால் நடத்தப்படும் ஜிம்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அங்கே சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரமாகவும் மணிக்கணக்காகவும் உடற்பயிற்சி செய்கிறார்கள் பலரும். வொர்க் அவுட்டுக்கேற்ற உணவுகளையோ, ஓய்வையோ கருத்தில் கொள்வதில்லை.
உடற்பயிற்சி செய்கிற பலரும் தேவையற்ற சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள். அத்தகைய செயற்கை சப்ளிமென்ட்டுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை… குறிப்பாக இதயத்துக்கு. இவை திடீர் மாரடைப்பையோ, கார்டியாக் அரெஸ்ட்டையோ ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை. எனவே இயற்கையான உணவின் மூலம்தான் உடலமைப்பை மாற்ற முயல வேண்டுமே தவிர, சப்ளிமென்ட்டுகளை தேடிப் போகக்கூடாது.