வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை.
பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம். வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.
நரம்பும் நுனியும் நீக்கிய வெற்றிலையில் பாதியை எடுத்துக் கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, ஒரு பாலாடை அளவு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து கால் பாலாடை அளவுக்கு, குழந்தைக்கு புரையேறாமல் கொடுக்க வேண்டும்.
வெற்றிலை போலவே குழந்தைகளுக்கு துளசி, ஓமவல்லி, முருங்கை இலை, வேப்பிலை, நுணா இலை, ஆடாதோடா இலை போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இவற்றில் நுணா இலை போன்று பெரிய இலையாக இருந்தால் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். துளசி, வேப்பிலை போன்றவற்றை மூன்று இலைகள் எடுத்துக் கொள்ளலாம்.