ஒரு வயது வரை குழந்தைகளின் உணவில் சர்க்கரையும் உப்பும் சேர்க்க வேண்டியதில்லை. ஒரு வயதுக்குப் பிறகு கொடுக்கும் உணவுகளில் சர்க்கரையும் உப்பும் சேர்த்துக் கொடுக்கலாம். இதுவரை உங்கள் மகள் செய்தது சரிதான். ஆனால் இதன் பிறகு குழந்தைக்கு சர்க்கரையை அறவே தவிர்த்து உணவு கொடுப்பது அவசியமில்லை. ஓரளவு சர்க்கரையும் உப்பும் சேர்த்துக் கொடுக்கத் தொடங்கலாம்.
ஒரு வயதுவரை குழந்தைக்குக் கொடுக்கும் உணவுகளிலும் இயற்கையான சர்க்கரை இருக்கும். குழந்தைக்கு ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கும்போது அவற்றில் இயற்கையிலேயே இனிப்புச்சத்து இருப்பதால் அதுவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் குழந்தையின் உணவில் சர்க்கரையே இல்லை என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. எனவே அந்த வயது வரை உணவிலுள்ள இயற்கையான சர்க்கரையைத் தாண்டி கூடுதல் இனிப்பு கொடுக்கத் தேவையும் இல்லை.
ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் அளவு சர்க்கரையும், 5 வயதுக் குந்தைகளுக்கு 3 முதல் 4 டீஸ்பூன் சர்க்கரையும், ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு 5 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் கொடுக்கலாம். இந்த அளவைத் தாண்ட வேண்டாம்.