எனவே எப்போதும் வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். சூப் போன்ற திரவ உணவுகளைக் குடிக்கவும் பழக்குங்கள்.
தயிரிலும் மோரிலும் உள்ள புரோபயாட்டிக் கிருமிகள் குடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவை. குழந்தைக்கு காய்ச்சலடிக்கும்போது தயிர், மோர் கொடுக்கலாமா என்று பல பெற்றோர் கேட்கிறார்கள். தாராளமாகக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காத, அறை வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் கொடுப்பதில் பிரச்னையே இல்லை.
காய்ச்சலின்போது தயிர்சாதம், வாழைப்பழம் எல்லாம் கொடுத்தால் ஜன்னி வந்துவிடும், சளி பிடித்துவிடும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள். இதெல்லாம் மூட நம்பிக்கையே. அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாதவை. வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யா, சாத்துக்குடி போன்றவற்றையும், வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள பப்பாளி, மாம்பழம், கேரட் போன்றவற்றையும், கீரைகளையும் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறனை இயற்கையாகவே மேம்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.